Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹிந்தி பேசும் மாநிலங்கள் முன்னேறவில்லை: திமுக எம்.பி

ஜுன் 06, 2022 06:33

சென்னை: தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்கள் வளர்ச்சியடைந்த நிலையில், வளர்ச்சி அடையாமல் பின்தங்கிய மாநிலங்களில் தான் ஹிந்தி பேசுவதாக திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஹிந்தி மொழியை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ‛ஹிந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஹிந்தி படித்தவர்கள்தான் பானிபூரி விற்கிறார்கள். யாரும் யார் மீதும் மொழியை திணிக்க கூடாது' என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் ஹிந்தி மொழி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு கூட்டத்தில் திமுக எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:ஹிந்தி நம்மை சூத்திரர்களாக மாற்றும். ஹிந்தி எந்த நன்மையும் நமக்கு செய்யாது. நான் சொல்லும் பட்டியலை கேளுங்கள். மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் வளர்ந்த மாநிலங்கள். இந்த மாநிலங்களில் ஹிந்தி தாய்மொழியாக இல்லை.
வளராத மாநிலங்கள் என்றால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். அப்படியெனில் எதற்காக நான் ஹிந்தி படிக்க வேண்டும். நாடு முன்னேற வேண்டும் என்றால் மாநில மொழிகளை பாதுகாக்க வேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்